தமிழ்நாட்டில் செய்யப்படும் பருப்பு கடையலின் சுவை மிகவும் தனித்துவமானது. அதைப்போலவே, ஆந்திராவின் சமையலில் தக்காளிக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் தக்காளி பருப்பு கடையல் (Tomato Pappu) தனியொரு இடத்தைப் பிடிக்கிறது. அதன் தனித்துவமான சுவை, நறுமணம் மற்றும் மிதமான காரம் பலரையும் அதன் பக்கம் சுண்டி இழுக்கும். ஆந்திராவின் காரசாரமான உணவுகளுக்கு மத்தியில், இந்த கடையல் பலரால் விரும்பி உண்ணப்படும் ஒரு பிரபலமான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
தக்காளி - 3
வெங்காயம் - 1
பூண்டு பல் - 3-4
பச்சை மிளகாய் - 2
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம்
வெந்தயப் பொடி
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் தேவையான அளவு நீர் சேர்த்து, 4 முதல் 5 விசில் வரும் வரை அல்லது நன்கு மசியும் வரை வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த பின், பருப்பை நன்கு மசித்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
இப்போது, ஊற வைத்து கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை இந்த வதக்கிய கலவையுடன் சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க விடவும். வதக்கிய கலவையுடன் மசித்து வைத்துள்ள வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்த நேரத்தில், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கடையலின் பதம் வர சரிசெய்யவும்.
மற்றொரு சிறிய கடாயில் நெய் (அல்லது எண்ணெய்) சேர்த்து சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடித்ததும், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து தாளிக்கவும். தாளித்த இந்தக் கலவையை தக்காளி பருப்பு கடையலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இப்போது, தேவையான அளவு உப்பு சேர்த்து, சுவையை சரிபார்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான், சூப்பரான சுவையில், ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் தயார். இதை சூடான சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். அப்பளம், ஊறுகாய், அல்லது பொரியல் போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம்.