தென்னிந்திய காலை உணவு வகைகளில் சட்னி ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகும். இட்லி, தோசை, பொங்கல் என எதுவுமே சட்னி இல்லாமல் முழுமையடையாது. அந்த வகையில் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி செய்முறையை இந்த குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 6-8
பூண்டு - 4-5
புளி - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் (வதக்க)
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். இந்த எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாயை சேர்த்து லேசாக வறுத்து ஒரு தட்டுக்கு மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை கருகவிடாமல் கவனமாக வதக்க வேண்டும்.
இப்போது, அதே எண்ணெயில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இந்த பருப்புகள் சிவந்ததும், சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதையும் வறுத்த மிளகாயுடன் அதே தட்டுக்கு மாற்ற வேண்டும்.
மீதமுள்ள எண்ணெயை அதே கடாயில் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் மீண்டும் வதக்கவும்.
அடுத்ததாக, நறுக்கிய தக்காளி, புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்றாக குழைந்து மென்மையாகும் வரை வதக்கலாம். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, வதக்கிய தக்காளி கலவையை, ஏற்கனவே வறுத்து வைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பருப்பு கலவையுடன் சேர்த்து ஆறவைக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக ஆறியதும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இனி, ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த சட்னியில் ஊற்றலாம். இவ்வாறு செய்தால் சுவையான கார சட்னி தயாராகி விடும்.