தக்காளியை அரைக்காமல், சிறிய துண்டுகளாக வெட்டி, மிகவும் சுவையான மற்றும் தனித்துவமான முறையில் எப்படி செய்வது என்று ஈரோடு அம்மாச்சி சமையல் யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இது சமைக்கும் நேரத்தைக் குறைப்பதோடு, எண்ணெய் தெறிப்பதையும் தவிர்க்கிறது.
Advertisment
தேவையான பொருட்கள்
தக்காளி நல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சோம்பு கறிவேப்பிலை சீரகம் மிளகு புளி உளுந்தம்பருப்பு பூண்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் காய்ந்த மிளகாய் மஞ்சள் தூள் உப்பு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை
செய்முறை
முதலில், ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம், மற்றும் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் இரண்டு கொத்து கறிவேப்பிலை, இரண்டு சிட்டிகை சீரகம் மற்றும் 10 மிளகும் சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தையும் ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும்.
250 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்தப் புளியை, ஏற்கனவே வறுத்து பொடி செய்த மசாலாவுடன் சேர்த்து மீண்டும் பொடி செய்து கொள்ளவும். இது தொக்குக்கு தனித்துவமான சுவையையும், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கவும் உதவும்.
Advertisment
Advertisements
அதே எண்ணெயில், ஒரு ஸ்பூன் கடுகு, முக்கால் ஸ்பூன் உளுந்தம்பருப்பு, இரண்டு கொத்து கறிவேப்பிலை, 100 கிராம் தட்டிய பூண்டு, இரண்டு கைப்பிடி சின்ன வெங்காயம், அரை ஸ்பூன் பெருங்காயம் மற்றும் ஐந்து காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.
ஒன்றரை கிலோ பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கடாயை மூடி, 15 நிமிடங்கள் சிம்மில் வேகவிடவும். தக்காளி நன்கு மசிந்ததும், ஒரு ஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து மீண்டும் வேகவிடவும்.
தக்காளி தொக்கு நன்கு வெந்து மசிந்த பிறகு, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும். தக்காளி தொக்கு சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்கு சிறந்த காம்பினேஷன். இது பயணங்களின் போது எடுத்துச் செல்லவும் மிகவும் ஏற்றது. இந்த தக்காளி தொக்கு, அதன் அசல் சுவையை இழக்காமல் நீண்ட நாட்கள் இருக்கும்.