சமையல் என்பது ஒரு கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் சுவையாகவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி செய்வது ஒரு பெரிய டாஸ்க். அப்படி இருக்கும் சமையலை கூட சூப்பராக மாற்ற உதவும் ஒரு சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம். இதனை நீங்களும் சமையலில் ஃபாலோ பண்ணுங்கள். அப்புறம் எல்லோருக்கும் உங்கள் சமையல் தான் பிடிக்கும்.
பாயாசம் கெட்டியாக: பாயாசம் நீர்த்துப் போனால், அதில் ஒரு வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, சிறிது தேன் கலந்துவிட்டால், பாயாசம் சுவையாகவும், கெட்டியாகவும் மாறும்.
பாகற்காய் கசப்பு குறைய: பாகற்காய் பொரியல் செய்யும்போது, பாகற்காயை சிறிது தயிரில் ஊறவைத்து, பின்னர் வதக்கினால் கசப்புத் தன்மை குறைந்துவிடும்.
சமையலுக்கு வேர்க்கடலை: வறுத்த வேர்க்கடலையைத் தூளாக்கி, அதை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும்போது, அது ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.
அவல் பச்சடி: நெய்யில் வறுத்த அவலை மோரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். இதனுடன் சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை, பெருங்காயம் கரைத்து ஊற்றி, கடுகு தாளித்துச் சேர்க்க, சுவையான அவல் பச்சடி தயார்.
மொறுமொறு வாழைக்காய் சிப்ஸ்: வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது, சூடான எண்ணெயில் நேரடியாகச் சீவிப் போட்டால், அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக மொறுமொறுவென்று வரும்.
ருசியான தக்காளி சட்னி: தக்காளி சட்னி அரைக்கும்போது, அதனுடன் சிறிது வறுத்த எள்ளை சேர்த்து அரைத்தால், சட்னி கூடுதல் சுவையுடன் இருக்கும்.
உப்புமா போண்டா: கடலை மாவுடன், சுக்குத்தூள், ஓமம், சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். மீந்துபோன உப்புமாவை உருண்டைகளாக்கி, இந்த பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தால் சுவையான போண்டா கிடைக்கும்.
குழம்புக்குச் சுவை கூட்ட: குழம்பு தயாரிக்கும்போது, வெங்காயம் மற்றும் காய்கறிகளை முதலில் நன்கு வதக்கிய பின், தக்காளியைச் சேர்த்து வதக்கினால் குழம்பின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
மிருதுவான மாவு: தோசை, இட்லி, வடை, போண்டா போன்றவற்றுக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து அரைத்தால், மாவு மிருதுவாகவும், அதிகமாகவும் கிடைக்கும்.
புதுப் பலகாரம் செய்யும்போது: எந்த ஒரு புதிய பலகாரத்தையும் பெரிய அளவில் செய்வதற்கு முன், முதலில் சிறிதளவு செய்து பார்த்து, பக்குவம் தெரிந்துகொண்ட பின் செய்தால் பொருட்கள் வீணாகாது.
வெள்ளையாக அவியல்: அவியல் செய்யும்போது, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன், நீரில் ஊறவைத்த சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்துச் சேர்த்தால், அவியல் வெள்ளை வெளேரென்றும், கெட்டியாகவும் இருக்கும்.