உணவு என்றாலே பிடிக்கும். அதுவும் பிரியாணி பலருக்கும் பிடித்த ரெசிபியாகும். வீட்டிலேயே பிரியாணி செய்து சாப்பிடுவோம். ஆனால் கடைகளில் செய்வது போல் இல்லை என்று நினைத்திருப்போம். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் பிரியாணி செய்வது குறித்து பார்க்கலாம். காலிஃப்ளவரில் பல ரெசிபி செய்து சாப்பிடுவோம். ஆனால் இங்கு பிரியாணி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
நறுக்கிய காலிஃப்ளவர் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அந்த அரிசியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் வைத்து நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு வேகவைக்கவும். அதன் பின் தண்ணீரை வடிகட்டி எடுக்கவும். இப்போது, காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மசாலா கலந்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்தெடுக்கவும். அடுத்ததாக, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடவும். 1 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து பரிமாறவும். அவ்வளவு தான் சூடான, சுவையான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“