கும்பகோணம் மாநகரில் அமைந்திருக்கும் மங்களாம்பிகா காபி மற்றும் டிபன் சென்டர் ஒரு புகழ்பெற்ற உணவு ஸ்தாபனம். அங்கு தயாரிக்கப்படும் தனித்துவமான "தவளை வடை" மிகவும் பிரசித்தி பெற்றது. செஃப் தீனா, விக்னேஷை சந்தித்து இந்த சுவையான வடையின் செய்முறையையும், அது ஏன் "தவளை வடை" என்று அழைக்கப்படுகிறது என்பதையும், அதன் சிறப்பம்சங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
Advertisment
விக்னேஷ், இந்த கடையை நடத்தி வரும் தன் தந்தைக்கு உதவியாக இருக்கிறார். தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்த இந்த ரெசிபியை அவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
விக்னேஷ் கூறுகையில், "முன்பு இந்த வடையை தட்டையான அடிப்பகுதியைக் கொண்ட 'தவலை' என்ற பாத்திரத்தில் பொரித்தெடுத்தார்கள். அதனாலேயே இதற்கு 'தவளை வடை' என்று பெயர் வந்தது. இந்த முறையில் பொரிப்பதால் தான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கிறது." மேலும், இந்த வடை வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்வதால் சுவையானது மட்டுமல்ல, அதிக புரதச்சத்தும், சத்துக்களும் நிறைந்தது என்கிறார்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு தலா 100 கிராம் மற்றும் 50 கிராம் அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கூடுதலாக, 50 கிராம் பாசி பருப்பை தனியாக ஊற வைக்க வேண்டும். உளுத்தம்பருப்பு மட்டும் 150 கிராம் சேர்க்கப்படுகிறது. மற்ற பொருட்களாக காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை தேவை.
செய்முறை:
ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை 70% விழுதாகவும், 30% கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டும். உளுத்தம்பருப்பை தனியாக அரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும். அரைத்த மாவுடன் காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தனியாக ஊறவைத்த பாசி பருப்பை நீரை வடிகட்டிவிட்டு முழுதாக மாவுடன் சேர்க்க வேண்டும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வடை தட்டவும், பொரிக்கவும் முடியாது.
இந்த வடையுடன் பரிமாறப்படும் தேங்காய் சட்னி மிகவும் புகழ்பெற்றது என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். விக்னேஷ் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்பு சேர்த்து சட்னி அரைக்கும் முறையை விவரித்தார். தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது. கெட்டியான இந்த தேங்காய் சட்னி, மொறுமொறுப்பான தவளை வடைக்கு அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
செஃப் தீனா ஒரு வடையை எடுத்து சுவைத்துவிட்டு, "என்ன ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி, உண்மையிலேயே மிகச் சிறந்தது! சட்னியும் மிக அருமையாக உள்ளது; கெட்டியான சட்னி இதற்கு கூடுதல் சுவை சேர்க்கிறது" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.