மதுரையில் உள்ள சௌராஷ்டிரா மக்களின் பாரம்பரியமான தக்காளி பொங்கல் செய்முறையைப் பார்க்கப் போகிறோம். இது கோயம்புத்தூரின் அரிசி பருப்பு சாதம் போலவும், பிரியாணியை மிஞ்சும் சுவையுடனும் இருக்கும். தக்காளி பொங்கல் என்பது அவர்களது பிரியமான உணவு. ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ தக்காளி சேர்க்கப்படுவது இதன் தனிச்சிறப்பு.
Advertisment
இது பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, மல்லி போன்றவற்றைச் சேர்த்து, வாசனையுடன் இருக்கும். பொதுவாக பச்சை அரிசியில் தயாரிக்கப்பட்டாலும், தற்போது சிலர் பிரியாணி அரிசியையும் பயன்படுத்துகிறார்கள். இது காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடக்கூடிய ஒரு தனித்துவமான உணவாகும். இதனை எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் (நறுக்கியது): 800 கிராம் தக்காளி: 2.5 கிலோ (அரைத்தது) பச்சரிசி: 3 கிலோ (20-30 நிமிடம் ஊறவைத்தது) இஞ்சி: 100 கிராம் பூண்டு: 150 கிராம் (100 கிராம் அரைத்தது, 50 கிராம் முழு பூண்டு) நெய்: 100 மில்லி மல்லித்தழை, புதினா: தலா 2 கைப்பிடி கரம் மசாலா: 2 ஸ்பூன் பச்சை மிளகாய்: 20 பட்டை: 10 கிராம், ஏலக்காய்: 5 கிராம், கிராம்பு: 3 கிராம் (அரைத்தது) சிக்கன் மசாலா: 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்: 2 ஸ்பூன் உப்பு: தேவையான அளவு எண்ணெய்: 800 மில்லி
Advertisment
Advertisements
செய்முறை
முதலில் தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தக்காளி பொங்கலுக்கு புளிப்புச் சுவை தரும் நாட்டுத் தக்காளி சிறந்தது.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிப்புடன் பூண்டு, வெங்காயம், புதினா, கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் 60-70% வதங்கியதும், அரைத்த தக்காளி சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் மல்லித்தழை, உப்பு, அரைத்த பட்டை மசாலா, சிக்கன் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். மசாலா வாசம் வந்ததும், அரிசிக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, 80-90% தண்ணீர் உறிஞ்சப்பட்டதும், நெய் ஊற்றி, வாழை இலையால் மூடி, 10 நிமிடம் குறைந்த தீயில் தம் போட்டு, பின் அடுப்பை அணைத்து 10 நிமிடம் வைக்கவும்.
சுடச்சுட தக்காளி பொங்கலை புதினா சட்னி, தேங்காய் சட்னி, தயிர் பச்சடி அல்லது குருமாவுடன் பரிமாறலாம். இந்த பொங்கல் வீட்டில் செய்ய மிகவும் எளிமையானது, சுவையானது, நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். பிரியாணியை விரும்புபவர்கள் இதை முயற்சி செய்தால், பிரியாணியை மறந்துவிடுவார்கள்.
இந்த தக்காளி பொங்கல், சௌராஷ்டிரா குடும்பங்களில் பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.