/indian-express-tamil/media/media_files/2025/08/14/tomato-chutney-2025-08-14-14-28-13.jpg)
வீட்டில் சட்னி செய்வது என்றாலே, எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி என அனைத்தையும் வதக்கி, அரைத்து, கடைசியாக தாளிப்பது தான் நம் வழக்கம். ஆனால், இந்த முறை எந்தவித தாளிப்பும், வதக்குதலும் இல்லாமல் ஒரு அற்புதமான சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். இந்த சட்னியின் தனிச்சிறப்பு, இதன் புகை வாசனை தான். இந்த சுவையான சட்னியை எப்படி செய்வது என்று செஃப் சன்ஜித் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 2-3
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பற்கள் - 4-5
பச்சை மிளகாய் - 2-3
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், இரண்டு அல்லது மூன்று நன்கு பழுத்த தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், 2-3 பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்கள் ஆகியவற்றை அடுப்பு தீயில் நேரடியாக சுட வேண்டும். இதுதான் இந்த சட்னியின் சுவைக்கு மிக முக்கியமான படி. அடுப்பில் சுடும் போது, கத்தரிக்காய் சுடுவது போல, இவற்றின் தோல் கருகி, உள்ளே மென்மையாகும். கவனமாக ஒவ்வொரு பொருளையும் திருப்பிப் போட்டு, எல்லாப் பக்கங்களிலும் நன்கு சுட்டு எடுக்கவும். ஒருவேளை அடுப்பில் சுட முடியவில்லை என்றால், இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்தும் பயன்படுத்தலாம்.
சுட்ட வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றின் கருகிய தோலை உரித்து நீக்கி, சுத்தம் செய்து ஒரு தட்டில் தனித்தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் சுட்ட தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புளி, தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதுவே ஒரு தரமான, சுவையான தக்காளி சட்னி.
இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து விதமான உணவுகளுக்கும் அருமையாக இருக்கும். எந்தவித தாளிப்பும் தேவை இல்லை, இதன் புகை வாசனை (Smoky flavor) ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இந்த சட்னியை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு நாள் வரை பயன்படுத்தலாம். இதன் சுவை நேரமாக ஆக இன்னும் கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.