புரதம் நிறைந்த சோயா சுக்கா அசைவ பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைவ மாற்றாக அமையும். அவ்வளவு சுவையான சோயா சுக்காவை எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தனியா - 2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1.5 டீஸ்பூன் கொப்பரை தேங்காய் - 20 கிராம் வறுக்காத பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன் சோயா சங்க்ஸ் - 200 கிராம் கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5-6 சின்ன வெங்காயம் - 75 கிராம் பச்சை மிளகாய் - 2-3 கருவேப்பிலை - 1 கொத்து பெரிய வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் பெரிய தக்காளி - 1 மஞ்சள் தூள் - 0.5 டீஸ்பூன் தனியா தூள் - 1 டீஸ்பூன் தெகி மிர்ச் பவுடர் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 0.75 டீஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைக்கவும். அரைத்த பிறகு, வறுக்காத பொட்டுக்கடலையைச் சேர்த்து மீண்டும் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்த பொடி 200 கிராம் சோயா சங்க்ஸ்க்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இப்போது சுக்காவுக்குத் தேவையான உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், தெகி மிர்ச் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
200 மில்லி தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும். முக்கால் டீஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் மந்த்ரா கடலை எண்ணெய் சேர்த்து, மசாலா கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். மசாலா அரை வறண்ட நிலையில் இருக்க வேண்டும்.
தண்ணீரில் ஊறவைத்த சோயா சங்க்ஸ்களை நன்றாகப் பிழிந்து மசாலாவில் சேர்க்கவும். மசாலா சோயாவுடன் நன்றாகக் கலக்கும்படி கிளறவும். அரைத்து வைத்திருக்கும் பொடி மசாலாவை (சுமார் 2 டீஸ்பூன்) சோயா சுக்கா மீது தூவி, தேவையான அளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
மசாலா ஒட்டிக்கொள்ள, கால் முதல் அரை டம்ளர் தண்ணீரை மேலே தெளித்து, நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடங்கள் அதிக தீயில் (பிளாஷ் குக்கிங்) சமைத்து, அடுப்பை அணைக்கவும். கடாயின் அடியில் பிடித்திருக்கும் மசாலாவை சுரண்டி விடவும், அதுதான் சுக்காவிற்கு சிறப்பான சுவையைக் கொடுக்கும்.
இந்த சுவையான சோயா சுக்காவை ஒரு ஸ்டார்ட்டராகவோ, ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவோ அல்லது மாலை நேர காபி அல்லது டீயுடன் ஒரு சிற்றுண்டியாகவோ பரிமாறலாம். விருந்தினர்கள் வரும்போது இது ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவாகவும் அமையும்.