சாப்பாட்டில் சுவையை கூட்டனுமா அப்போ இந்த மாதிரி டிப்ஸ்களை எல்லாம் ஃபாலோ பண்ணுங்கள். சுவையாக இருக்கும். சாப்பாடும் நன்றாக வரும். சாப்பாடு வடிப்பது முதல் சமையலில் சுவையை அதிகரிக்க ஒரு சில டிப்ஸ்கள் இதோ.
டிப்ஸ் 1: சமைத்த சாதம் மீந்துவிட்டால், அதில் தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் ஊற்றிப் பிசைந்து, ஒரு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலை சுவையான தயிர் சாதம் தயாராக இருக்கும். இதை எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 2: வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, வழவழப்புத் தன்மையைக் குறைத்து, மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்க, வதக்கும் போது ஒரு சிறிய கரண்டி தயிர் சேர்த்துக் கிளறவும்.
டிப்ஸ் 3: வாழைத்தண்டு அல்லது வாழைப்பூவை நறுக்கியதும், உடனடியாக அரிசி கழுவிய நீரில் போட்டு வைக்கவும். பின்னர், மோர் கலந்த நீரில் ஒருமுறை அலசிவிட்டுப் பொரியல் செய்தால், அதன் நிறம் மாறாமல் இருப்பதோடு, துவர்ப்புத் தன்மை குறைந்து, சுவை அதிகரிக்கும்.
டிப்ஸ் 4: புது அரிசியில் சாதம் சமைக்கும் போது, அது பெரும்பாலும் குழைந்து ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும். சாதம் உதிரி உதிரியாகக் கிடைக்க, சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும்.
டிப்ஸ் 5: ரவா தோசை மாவு கரைக்கும் போது, ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வார்த்தால், ஹோட்டல்களில் கிடைப்பதைப் போல பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதனுடன் எள் மற்றும் மிளகாய் பொடியை நல்லெண்ணெய் கலந்து தொட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
டிப்ஸ் 6: இட்லி, தோசைக்கான மிளகாய்ப் பொடிக்கு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி ஆகியவற்றை வறுத்த பின்பு, ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் 100 கிராம் சுத்தமான கருப்பு எள் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்து அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை அதன் வாசனையும் சுவையும் குறையாமல் இருக்கும்.
டிப்ஸ் 7: கோதுமை மாவு அரைக்கும் போது, அதனுடன் சிறிதளவு வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால், சப்பாத்திகள் மிருதுவாகவும், சுவையாகவும், அதிக சத்துடனும் இருக்கும்.
டிப்ஸ் 8: ரசம் அதிக மணம் பெற வேண்டுமானால், புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைக்கவும். ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும், இளம் கொத்தமல்லித் தழையைத் தூவிவிட்டால், வீடே ரசத்தின் மணத்தால் நிரம்பி வழியும்.