உங்கள் சமையலில் சில எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும் உணவின் சுவையையும் தரத்தையும் மேம்படுத்தலாம். அப்படியாக எப்போதும் நியாபகம் வைத்துக்கொள்ள உதவும் சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
மெதுவான உளுந்து வடை: உளுந்து வடை மாவுடன், சிறிது ஊறவைத்த பாசிப்பருப்பை (பயத்தம் பருப்பு) சேர்த்து வடை சுட்டால், வடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
மொறுமொறு பஜ்ஜி: பஜ்ஜி மாவுடன், இரண்டு ஸ்பூன் ஊறவைத்து அரைத்த உளுத்தம் பருப்பை கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் அமையும்.
ருசியான தயிர் வடை: தயிர் வடைக்கு மாவு அரைக்கும்போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து முந்திரிப் பருப்புகளையும் ஊறவைத்து அரைத்துச் சேர்த்தால், வடை மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு வேகும் முறை: உருளைக்கிழங்கை விரைவாக வேகவைக்க, வேகவைக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளையும், எண்ணெயையும் சேர்க்கவும்.
சுவையான ஜவ்வரிசி வடகம்: ஜவ்வரிசி வடகம் தயாரிக்கும்போது, சிறிதளவு எள், சீரகம், பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றைச் சேர்த்து செய்தால், பொரித்து சாப்பிடும்போது தட்டை போல சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
தக்காளி சூப்பிற்கு ஒரு மாற்று: தக்காளி சூப்பில் சேர்க்க பிரெட் துண்டுகள் இல்லையெனில், ஜவ்வரிசி வடகம் இருந்தால், அதை பொரித்து சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.
பீட்ரூட் கூட்டு: பீட்ரூட்டின் தோலை நீக்கி, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, தேங்காய் சேர்த்து அரைத்து, அதனுடன் பீட்ரூட்டை சேர்த்து கூட்டு செய்தால், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
மணம் நிறைந்த சாதம்: சாதம் சமைக்கும்போது, சமைக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்தால், சாதம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை வாசம்: கறிவேப்பிலையை தாளிக்கும்போது, அடுப்பை அணைப்பதற்கு முன் சேர்த்தால் அதன் மணம் நீடிக்கும்.