உருளைக்கிழங்கு வறுவல் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல், அடுத்த முறை இந்தக் கருவேப்பிலை உருளைக்கிழங்கு வறுவலை முயற்சி செய்து பாருங்கள்.
கமகமவென கருவேப்பிலை வாசனையுடன் சாப்பிடும்போது இதன் சுவை அபாரமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று மைசெல்ஃப்டைம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ (வேகவைத்து உப்பு சேர்த்து)
சீரகம் - அரை ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
தனியா - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - 4 கொத்து (2 கொத்து வறுக்க, 2 கொத்து தாளிக்க)
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
பெருங்காயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன் (வேகவைத்த உருளைக்கிழங்கில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால், தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
கொத்தமல்லி
செய்முறை:
அரை ஸ்பூன் சீரகம், சோம்பு, மிளகு, ஒரு ஸ்பூன் தனியா மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு வறுத்து, ரோஸ்ட் ஆனதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை, கால் ஸ்பூன் பெருங்காயம் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வேகவைத்து எடுத்து வைத்துள்ள அரை கிலோ உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்கு வேகவைக்கும் போதே உப்பு சேர்த்திருப்பதால், இப்போது அரை ஸ்பூன் உப்பு மட்டும் சேர்க்கவும். அரை நிமிடம் குறைந்த தீயில் வறுத்து, பின்னர் நாம் தயார் செய்து வைத்துள்ள பொடியை மேலே தூவி நன்கு கலக்கவும்.
இரண்டு நிமிடம் போல நன்கு சமைத்து, கை நிறைய கொத்தமல்லி போட்டு இறக்கினால் சுவையான கருவேப்பிலை உருளைக்கிழங்கு வறுவல் தயார்.