கறிவேப்பிலை தொக்கு சாப்பிடும் போது சுவையுடன் சேர்த்து உடலுக்கு பல சத்துகளும் கிடைக்கும். அதன்படி, ஒரு மாதம் கூட கெடாமல் இருக்கும் சுவையான கறிவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 300 கிராம்,
புளி - அரை கிலோ,
நல்லெண்ணெய் - முக்கால் லிட்டர்,
உப்பு - தேவையான அளவு,
வெல்லம் - தேவையான அளவு,
கடுகு - மூன்று டீஸ்பூன்,
வெந்தயம் - மூன்று டீஸ்பூன்,
மிளகாய் பொடி - மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கறிவேப்பிலை, வெல்லம், உப்பு மற்றும் ஊற வைத்த புளி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். மற்றொரு புறம், அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும். இதையடுத்து, இவை இரண்டையும் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம்.
இப்போது, அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் அரைத்து வைத்திருந்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த விழுது நன்றாக கொதிக்கும் போது, வறுத்து வைத்திருந்த வெந்தயம் மற்றும் கடுகை மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும்.
கறிவேப்பிலை விழுதை தாளித்த பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விட்டு அதில் மிளகாய் தூள் சேர்த்து கலக்க வேண்டும். இவற்றுடன் அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் கடுகையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயாராகி விடும். இதனை சாதம் மற்றும் சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்த கருவேப்பிலை தொக்கை சுடச்சுட சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் பிரட் மேலே அப்படியே ஜாம் போல தடவையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.