வீட்டுல குழம்பு இல்லையா? கவலையை விடுங்க; இந்த தொக்கு சேர்த்து ருசித்தால் தட்டு சோறு காலியாகும்!
சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் கறிவேப்பிலை தொக்கு செய்முறை குறித்து இந்த சமையல் குறிப்பில் காணலாம். இதன் ருசி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் கறிவேப்பிலை தொக்கு செய்முறை குறித்து இந்த சமையல் குறிப்பில் காணலாம். இதன் ருசி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அமைந்திருக்கும்.
நம் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவு சாதமாக இருக்கும். அதன்படி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட கறிவேப்பிலை தொக்கு செய்முறையை இதில் பார்க்கலாம். இந்த தொக்கு இருந்தால் குழம்பு இல்லாமலே சாதத்தை சாப்பிட முடியும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இதன் பின்னர், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், இவை அனைத்தையும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம்.
இரண்டு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலைகளை நன்றாக சுத்தம் செய்து, உலர்த்தி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதையடுத்து, கறிவேப்பிலையையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
இப்போது, ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவிற்கு புளி எடுத்துக் கொள்ளலாம். இதனை சிறிதளவு சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்தப் புளியையும் அதே கடாயில் போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும். இனி, வறுத்து வைத்த கடுகு, மல்லி மற்றும் வெந்தயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளலாம்.
இதன் பின்னர், இதே பொடியுடன் கறிவேப்பிலை மற்றும் புளியையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு அரைத்த பின்னர், இரண்டரை ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு வெல்லம், இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து தொக்கு பதத்திற்கு மீண்டும் அரைக்க வேண்டும்.
இவற்றை ஒரு புறம் வைத்து விட்டு, அடுப்பில் இருக்கும் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை சிவந்ததும் மூன்று காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் பெருங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்த தொக்கு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
சுமார் 10 நிமிடங்களுக்கு இதனை வதக்கி எடுத்தால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயாராகி விடும். இதனை இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.