டீக்கடைகளில் வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைச் செய்தித்தாளில் வைத்து, எண்ணெயை உறிஞ்சும் பழக்கம் பரவலாக உள்ளது. இதனால் எண்ணெய் குறைகிறது என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இந்தச் செயல்பாடு உங்கள் உடலுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
செய்தித்தாள்களில் அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் காரீயம் (Lead) என்ற நச்சுப்பொருள் உள்ளது. காகிதம் உலர்ந்த நிலையில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால், தண்ணீர் அல்லது எண்ணெய் படும்போது, இந்த காரீயம் எளிதில் உணவில் கலக்கும் வாய்ப்புள்ளது.
எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயைச் செய்தித்தாளில் உறிஞ்சும் போது, காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்றுவிடும். இது கைகளைக் கழுவிய பின் செய்தித்தாள்களைத் துடைப்பதைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. சிறு உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் கைகளைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் செய்தித்தாள்கள் கூட காரீய நச்சை உடலுக்குள் கொண்டு சேர்க்கும்.
காரீயத்தின் உடல்நல பாதிப்புகள்:
சிறுநீரகம்: சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும்.
கல்லீரல்: கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.
எலும்பு மற்றும் தசை வளர்ச்சி: குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.
பிற நச்சுப் பொருட்களைப் போல காரீயம் உடலிலிருந்து கழிவாக வெளியேறுவதில்லை. மாறாக, இது உடலில் படிப்படியாகச் சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் காலப்போக்கில் உடல்நலக் கெடுதல்கள் அதிகரிக்கும்.
சில உலோகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு உடலில் இருப்பது தீங்கில்லை. ஆனால், காரீயம் மிகச் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சுப் பொருள். காரீயம் என்பது ஈயம் அல்லது அலுமினியம் போன்ற உலோகம் அல்ல. ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் அலுமினியப் பாத்திரங்கள் (எவர்சில்வர் வருவதற்கு முன் பயன்படுத்தப்பட்டவை) உடலுக்குக் கெடுதல் தராதவை.
ஆனால் காரீயம் அப்படியல்ல. முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் சேர்க்கப்பட்டது, இது வாகனப் புகை வழியாக நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பெட்ரோலில் இருந்து காரீயம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, எண்ணெய் பலகாரங்களைச் சாப்பிடும்போது அல்லது கைகளைத் துடைக்கும்போது செய்தித்தாளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது உடல்நலத்துக்கு மிகவும் முக்கியம்.