பேரீச்சம் பழம் ஏராளமான சத்துகளை கொண்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தருவது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இதை சாப்பிட்டு வர அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் தடுக்கும். இவ்வாறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பேரீச்சம்பழத்தில் அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
வால்நட்ஸ் – 2 கப்
பேரீச்சம் பழம் – 400 கிராம் விதை நீக்கியது
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1/4 கப்
நெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி வால்நட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும். பின் அது நன்கு ஆறியதும், மிக்சியில் ஒன்று இரண்டாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்து கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை எடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் சேர்த்து இதை போட்டு நன்கு வேகவைக்கவும். பேரீச்சம் பழம் மசிந்து வந்தவுடன் தண்ணீரை வடித்து அதில் நெய் சேர்த்து கலக்கவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு போட்டு தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். கெட்டியாக இருக்க கூடாது. இப்போது, சோளமாவு தண்ணீரை பேரீச்சம் பழத்தில் ஊற்றி நன்றாக கிளறவும். ஹல்வா பதத்திற்கு வந்ததும் அதில் ஏலக்காய் தூள், வறுத்த வால்நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
இப்போது மீண்டும் ஒரு முறை நெய் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேக விடவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியம் நிறைந்த பேரீச்சை அல்வா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“