வட இந்தியாவில் ஆலு அதாவது உருளைக்கிழங்கு அதிகம் எடுத்துக் கொள்வர். சப்பாத்தி, ரொட்டி, கோதுமை உணவுகள் அதிகம் சாப்பிடுவர். இதற்கு சைட் டிஷ்ஷாக பெரும்பாலும் உருளைக்கிழங்கை வைத்து தான் சாப்பிடுவர். உருளைக்கிழங்கை விதவிதமாக செய்து உணவில் சேர்த்துக் கொள்வர். அந்தவகையில், காரசாரமான சுவையான தந்தூரி ஆலு டிக்கா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிறிய உருளைக்கிழங்கு -10
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/4 கப்
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கசூரி மேத்தி தூள் - 1/2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் அதில் உருளைக்கிழங்கை போடவும். உருளைக்கிழங்கு வெந்த பிறகு, அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி, தண்ணீரை வடிகட்டி, ஒவ்வொரு உருளைக்கிழங்கையும் இரண்டாக நறுக்கவும். அடுத்து, வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி, அதில் தயிர் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து, அதில் சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து உருளைக்கிழங்குடன் பிரட்டவும். கலவையை சிறிது நேரம் ஊற விடவும். இப்போது, நான்-ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி, அதில் சிறிது சமையல் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும், அதில் மேரினேட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கைச் சேர்த்து, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஓரளவு வறுபட்டதும் இவற்றை ஒரு தட்டில் மாற்றி, அதன் மீது எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். அவ்வளவு தான், சூடான, சுவையான தந்தூரி ஆலு டிக்கா ரெடி. புதினா சட்னி, புளி சட்னி வைத்து பரிமாறலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil