/indian-express-tamil/media/media_files/2025/06/25/doctor-deisy-2025-06-25-10-49-02.jpg)
முட்டு வலி என்பது இன்றைய காலகட்டத்தில் பலரையும் பாதிக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. சில சமயங்களில் வந்து செல்லும் வலி, நாளடைவில் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்குக் கடுமையானதாக மாறுகிறது. வீட்டு வேலைகள் செய்ய முடியாமல், இரவு நிம்மதியாகத் தூங்க முடியாமல், முழங்கால், முதுகு, தோள்பட்டை, கை மற்றும் விரல் மூட்டுகள் என உடலின் பல பாகங்களிலும் ஏற்படும் வலியால் பலர் அவதிப்படுகிறார்கள்.
பல வருடங்களாக உங்களை வாட்டி வதைக்கும் இந்த மூட்டு வலியை, சில எளிய உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் எலும்புகளின் அடர்த்தியை (bone density) அதிகரித்து, சினோவியல் திரவத்தை (synovial fluid) உற்பத்தி செய்து, மூட்டு வலியை மாயமாக மறையச் செய்யும் கீரைகள் உட்பட 5 முக்கிய உணவுகளை பற்றி டாக்டர் டெய்சி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
1. கீரை வகைகள்
கீரைகள் உங்கள் உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பெற வேண்டும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணிக் கீரை என எந்த வகைக் கீரையாக இருந்தாலும் நல்லது. கீரைகளில் நிறைந்துள்ள கால்சியம் சத்து, மூட்டுகளை உறுதியாக்கும். மேலும், இரத்தத்தில் கிருமிகள் சேருவதைத் தடுத்து, ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்க கீரைகள் உதவுகின்றன.
2. மாட்டுப்பால்
மாட்டுப்பால் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்சர், குளிர்ச்சி எனப் பல கருத்துகள் இருந்தாலும், சுத்தமான மாட்டுப்பால் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த மருந்தாகும். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர் பால் அருந்துவது நல்லது.
பாலில், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சள் மற்றும் மிளகு இரண்டும் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து, எலும்புகளை வலுப்படுத்தும். இது கால்சியம் நிறைந்த அருமையான உணவாகும்.
3. நெய் மற்றும் வெண்ணெய்
நெய் மற்றும் வெண்ணெய் எலும்புகளை உறுதியாக்க மிக அவசியம். நம் உடலில் நல்ல கொழுப்பு (Good Cholesterol) போதுமான அளவில் இருந்தால் மட்டுமே எலும்புத் தேய்மானம் தடுக்கப்படும், மேலும் சினோவியல் திரவம் உருவாகும். இந்த சினோவியல் திரவம் தான், மூட்டுகளுக்கு இடையில் ஏற்படும் உராய்வைத் தடுத்து, வலியில்லாமல் இயங்க உதவுகிறது.
முற்காலத்தில், மூட்டு வலி ஏற்பட்டால் ஆட்டுக்கால் சூப் தினமும் குடிக்கச் சொல்வார்கள். இது எலும்பு மஜ்ஜை மற்றும் சினோவியல் திரவம் உருவாக மிகவும் உதவும். வெண்ணெயை வெறும் வயிற்றில் சுடுநீருடன் உட்கொள்வது அல்சர், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சித்தர்கள் கூட, "நீர் சுருக்கி, நெய் உருக்கி, மோர் பெருக்கி சாப்பிட்டால் நூறு வருஷம் உயிர் வாழலாம்" என்று கூறியுள்ளனர். நெய், எலும்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அல்சர், புற்றுநோய், பைல்ஸ், மலச்சிக்கல் போன்ற பல நோய்களையும் குணப்படுத்தி, ஆயுளை அதிகரிக்கும்.
4. பன்னீர் (பாலாடைக்கட்டி)
பன்னீர் என்பது பாலை விட, ஏன் கீரைகளை விடவும் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு உணவுப் பொருள். இது அதிக அளவில் கால்சியம் சத்தைக் கொண்டுள்ளதால், எலும்புகளை மிகவும் உறுதியாக்கும். பன்னீரை பட்டர் மசாலா, கடாய் பன்னீர், மிக்ஸ் வெஜ் போன்ற பல்வேறு சுவையான ரெசிபிகளில் சேர்த்துச் சாப்பிடலாம்.
5. பயறு வகைகள்
மூட்டு வலிக்கு மிகச் சிறந்த உணவுப் பொருள் என்றால் அது பயறு வகைகளே ஆகும். பாதாம், கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், உளுந்து, காராமணி, வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், அவரைக்கட்டை, சோயாபீன்ஸ், பாசிப்பயிறு, கொள்ளு, நரிப்பயிறு, பிஸ்தா பருப்பு என அனைத்து வகை பயறுகளும் இதில் அடங்கும்.
இந்த பயறு வகைகளை இரவு ஊறவைத்து, அடுத்த நாள் சுண்டல் செய்தோ, சாலட் வடிவிலோ (வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து) அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம். பயறுகளை அவியலாக மட்டுமல்லாமல், சோயாபீன்ஸ் சப்ஜி, பச்சை பட்டாணி மசாலா போன்ற பல்வேறு சுவையான ரெசிபிகளாகச் செய்து சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். சுவையான உணவாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாம் தொடர முடியும்.
இந்த 5 உணவுகளுடன், உங்கள் உணவில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு ஆகியவற்றைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியவை.
இந்த உணவுப் பழக்கத்தை 15 நாட்களுக்குத் தொடர்ந்து கடைப்பிடித்தால், மூட்டு வலி குறையத் தொடங்கும். ஒரு மாதத்தில் வலி மேலும் குறைவதை நீங்கள் உணர்வீர்கள். வலி குறைந்தவுடன், தினமும் 10 நிமிடங்கள் வெயில் படும்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். நிழலிலேயே இருப்பவர்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.