/indian-express-tamil/media/media_files/2025/06/18/Doctor Narmadha-7d19a357.jpg)
பல நோய்களுக்கு பொதுவான காரணமாக மலச்சிக்கல் இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கலுக்கான காரணங்களையும், அதற்கான எளிய வீட்டு வைத்தியங்களையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் பற்றி மருத்துவர் நர்மதா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த குறிப்பில் பார்க்கலாம்.
அந்த வகையில் முதலில் மலச்சிக்கலுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, அடிக்கடி சளி பிடித்தல், தலைவலி, வாயு தொல்லை, வயிறு மந்தமாக இருப்பது, பசியின்மை, செரிமானமின்மை, தூக்கமின்மை மற்றும் சோர்வு ஆகியவை மலச்சிக்கலுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.
மலச்சிக்கல் உருவாவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, அதிகமாக அல்லது அடிக்கடி சாப்பிடுவது, சாப்பிடும்போது அதிக தண்ணீர் குடிப்பது, போதுமான தூக்கமின்மை, போதுமான தண்ணீர் குடிக்காதது மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை மலச்சிக்கலுக்கான காரணங்களாக அமைகின்றன.
மலச்சிக்கலை போக்குவதற்கு சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம் என்று மருத்துவர் நர்மதா கூறுகிறார். அதன்படி, இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் குடிக்கலாம். உலர் திராட்சை மற்றும் அத்திப்பழத்தை இரவில் ஊறவைத்து காலையில் பேரீச்சம்பழத்துடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம். வில்வ இலை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிப்பது பலன் அளிக்கும். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், மீதி வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
இவை மட்டுமின்றி, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். மெதுவாகவும், நிதானமாகவும் சாப்பிட வேண்டும். தினசரி உணவு நேரத்தை ஒரே மாதிரி பின்பற்றுவது நல்லது. மேலும், நன்கு மென்று சாப்பிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற விஷயங்களை பின்பற்றும் போது மலச்சிக்கல் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் நர்மதா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.