/indian-express-tamil/media/media_files/2025/06/17/79zM4XVGNw6uIIMnp6eL.jpg)
வயிற்றுப் புண் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பது பற்றி மருத்துவர் ராஜலட்சுமி டிரேடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் யூடியூப் சேனலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். அவை குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
அந்த வகையில், அசிடிட்டி மற்றும் புளிப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது தவிர துவர்ப்பு சார்ந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார். இது வயிற்றுப் புண் ஏற்படுவதை தடுக்க உதவும்.
மேலும், காலையில் எழுந்தவுடன் மாவிளங்குப் பட்டை குடிநீர் குடிக்கலாம். முதல் நாள் இரவே மாவிளங்குப் பட்டையை குடிநீரில் ஊறவைத்து, மறுநாள் காலை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். பழைய சாதம், மோர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசி, கருங்குறுவை அரிசி மற்றும் தூயமல்லி அரிசி போன்ற பட்டை தீட்டாத அரிசி வகைகளை நாள்தோறும் சாப்பிடும் உணவாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் போன்றவற்றை சாப்பிடலாம். இஞ்சியும், பூண்டும் அளவாகச் சேர்த்துக் கொள்ளலாம். மதியம் சாதத்துடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, ஆவியில் வேகவைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி தாளித்துச் சாப்பிடலாம்.
மாலையில் காய்கறி சூப் அல்லது அவல் வகைகள் சாப்பிடலாம். இரவில் ஆவியில் வேகவைத்த உணவுகள் அல்லது பழங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.