உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும் ஒரு தேநீர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் ரதி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அது தொடர்பான விளக்கத்தை இந்தக் குறிப்பில் காணலாம். முதலில், இந்த தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்ப்போம்.
தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
பட்டை,
ஏலக்காய்,
மஞ்சள்,
மிளகு,
இஞ்சி,
எலுமிச்சை,
தேநீர் தூள் (கிரீன் டீ அல்லது சாதாரண தேநீர் தூள்)
தேநீர் தயாரிக்கும் முறை:
இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இப்போது, ஒரு டீஸ்பூன் தேநீர் தூள், அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், கால் டீஸ்பூன் பட்டை தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு சிட்டிகை மிளகு தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி சேர்க்கவும்.
இந்த கலவையை ஏழு நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். அதன் பின்னர், இதனை வடிகட்டி, அரை எலுமிச்சை சாறு பிழிந்து, தேவைப்பட்டால் அரை டீஸ்பூன் தேன் சேர்த்து சூடாக குடிக்கலாம். இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் மெதுவாக குடிக்க வேண்டும்.
அக்குபிரஷர் சிகிச்சை முறை:
கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள மடிப்பு முடிவடையும் இடத்தில் அழுத்தம் கொடுக்கவும். இது கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் தலைவலி ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
இதேபோல் கால்களில் மூட்டு மற்றும் கணுக்கால் பகுதிகளில் இவ்வாறு செய்யும் போது, அவை உடலில் இருந்து நீரை வெளியேற்றவும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன. இந்த அக்குபிரஷர் புள்ளிகளுக்கு ஒரு நாளைக்கு இருமுறை, ஒவ்வொரு புள்ளிக்கும் மூன்று நிமிடங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த தேநீர் மற்றும் அக்குபிரஷர் முறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் 7 நாட்களில் வீக்கம் குறையும், உடல் இலகுவாகி, 21 நாட்களில் வலிகள் குறைந்து, சோர்வு நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெறும் என்று மருத்துவர் ரதி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.