/indian-express-tamil/media/media_files/2025/05/22/HCsXjnWYeZwvXiITsP59.jpg)
உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நாம் உண்ணும் உணவு தான். அந்த உணவு சரியான முறையில் செரிமானம் அடைந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் பலரும் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலவித நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது என ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவுகள் செரிமானம் அடைந்து வாயுக்கள் உருவாகின்றன. இந்த வாயுக்கள் வாய் வழியாகவோ அல்லது மலத்துடனோ வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறவில்லை என்றால், அவை உடலில் உறிஞ்சப்பட்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, வயிற்றில் வாயு அதிகமாக சேர்ந்து வயிறு உப்புசம், இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது நாளடைவில் கை, கால் மூட்டுகளில் தேங்கி மூட்டு வலியை ஏற்படுத்தும். மேலும், செரிமான கோளாறுகள் காரணமாக குடலில் கிருமி தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர் சதீஷ் குமார் கூறுகிறார்.
இது மட்டுமல்லாமல், சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் சத்துக்கள் உடலில் சேராமல் போவதால் சோர்வு, பலவீனம், தூக்கமின்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு கிருமி தொற்றுகளால் தோல் பிரச்சனைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும்.
சித்த மருத்துவத்தில், வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்வதே பல நோய்களைத் தடுக்க சிறந்த வழி என்று கூறப்படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சதீஷ் குமார் அறிவுறுத்துகிறார். இதனால் உடலில் உருவாகும் அதிகப்படியான வாயு வெளியேற்றப்படும். மேலும், செரிமான கோளாறுகள் மற்றும் கிருமி தொற்றுகள் நீக்கப்படும்.
அதன்படி, இதற்கான மருந்து தயாரிக்கும் முறை குறித்து மருத்துவர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டு மருந்து கடைகளில் வாய்விலங்கம் கிடைக்கும். இதனை பொடியாக அரைத்து சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது தவிர தேனுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் வாயுத் தொல்லைகள் குணமடையும். மேலும், வயிற்றில் இருக்கும் புழுக்களையும் இது நீக்கும் என்று மருத்துவர் சதீஷ் குமார் கூறுகிறார்.
வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவது இதற்கு அவசியமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.