காலையில் இட்லி அவிக்கும் போது ஒரு தட்டில் சுண்டல்... 20 ஆண்டு ஆயுளை நீடிக்க மருத்துவர் சிவராமன் யோசனை
ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு நாம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் குறித்து மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, நம் ஊருக்கு அருகாமையில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
நம் வீட்டு அடுப்பங்கரையில் கூடுதலாக 20 நிமிடங்கள் செலவளித்தால், நம்முடைய ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகளை அதிகரிக்க முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். நாளை காலை இட்லி சாப்பிடுவது என்று முடிவு செய்து விட்டால், முந்தைய நாள் இரவே கொண்டை கடலையை தயார் செய்து விடலாம் என அவர் பரிந்துரைக்கிறார். இதன் மூலம் நம் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்து விடுகிறது.
Advertisment
உலக அளவில் புரதம் குறைவாக சாப்பிடுபவர்களின் பட்டியலில் இந்தியர்கள் இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். புரதத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை இருப்பதால், நம் உணவில் அவை இருப்பதை உறுதி செய்திட வேண்டும். நல்ல மீன்கள், கோழி இறைச்சி போன்றவற்றில் இருந்து புரதச் சத்தை பெறலாம்.
இதேபோல், சாதாரண வெள்ளை நிறத்திலான அரிசியை பயன்படுத்தி தோசை, இட்லி சமைப்பதை தவிர்த்து விட வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். அதற்கு மாற்றாக மாப்பிளைச் சம்பா போன்ற அரிசியை பயன்படுத்தினால், நம் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக, கருநீலமாக இருக்கும் நாவல் பழம், திராட்சை, கத்திரிக்காய் போன்றவற்றில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
இதேபோல், சர்க்கரைவள்ளி கிழங்கில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்க்கரைவள்ளி கிழங்கு தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இதனை வேகவைத்து சாப்பிடும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு உயருவது தாமதம் ஆகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ஜப்பானில் இருக்கக் கூடிய ஒக்கினாவா என்ற தீவில் இருக்கும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 103 வயது என ஒரு ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அங்கு இருப்பவர்களிடம் இது குறித்து கேட்டறிந்த போது அவர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, அங்கு இருப்பவர்கள் அதிகமாக விவசாயம் செய்து தங்கள் உணவுகளை உற்பத்தி செய்கின்றனர்.
மேலும், வயிற்றுக்கு 80 சதவீத உணவு மட்டுமே அவர்கள் சாப்பிடுகின்றனர். குறிப்பாக, கருநீல நிற சர்க்கரைவள்ளி கிழங்கை அப்பகுதி மக்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர் என மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
அதில் இருந்து கிடைக்கக் கூடிய அந்தோசைனின் என்கிற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். இதே சத்து நம் ஊரில் இருக்கும் நாவல் பழம், கத்திரிக்காயிலும் இருக்கிறது என்று சிவராமன் கூறியுள்ளார். எனவே, இது போன்ற உணவு பொருட்களை கண்டறிந்து நாம் சாப்பிட வேண்டும் என சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.