சமையல் என்பது ஒரு கலை. தினமும் சமைக்கும் போது சில எளிய குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் சமையலறை ஒரு நட்சத்திர ஹோட்டல் கிச்சன் போல மணக்கும். உங்களுக்கான சில சமையல் டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ரவா தோசை சுடும் போது, மாவை கரைக்கும் தண்ணீரில் ஒரு கரண்டி கடலை மாவை சேர்த்து கரைத்து தோசை சுடுங்கள். தோசை பொன்னிறமாக வருவதுடன், மொறுமொறுவென்று ஹோட்டல் தோசை போல இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள, எள்ளு, மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவை சூப்பராக இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, வழவழப்பாக ஆகிவிடுமோ என்று கவலைப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம்! வெண்டைக்காயை வதக்கும் போது, சிறிது தயிர் சேர்த்து வதக்குங்கள். இதனால் வழவழப்புத் தன்மை நீங்கி, பொரியல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
வாழைத்தண்டு அல்லது வாழைப்பூவை நறுக்கியதும், அவை நிறம் மாறாமல் இருக்க முதலில் அரிசி களைந்த நீரில் போட்டு விடுங்கள். பிறகு, சமைப்பதற்கு முன் நீரில் ஒரு முறை அலசி எடுத்து பொரியல் செய்யுங்கள். இப்படிச் செய்வதால், அவற்றின் நிறம் மாறாமல் இருப்பதோடு, துவர்ப்புத் தன்மை குறைந்து, சுவை அதிகரிக்கும்.
புதிய அரிசியில் சாதம் சமைக்கும் போது, சில சமயங்களில் குழைந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். சாதம் உதிரி உதிரியாகவும், கமகமவென்றும் இருக்க, சாதம் வடித்த பிறகு, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து மெதுவாகக் கிளறி விடுங்கள்.
இட்லி, தோசைக்கு அரைக்கும் மிளகாய்ப் பொடி ஒரு மாதம் வரை வாசமுடன் இருக்க ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி இவற்றை வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் 100 கிராம் சுத்தமான கருப்பு எள் இரண்டையும் வறுத்துச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை வாசனையும், சுவையும் குறையாமல் இருக்கும்.
கோதுமை மாவு அரைக்கும் போது, அதனுடன் வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவில் சப்பாத்திகள் செய்யும்போது, அவை மிருதுவாகவும், ருசியாகவும் இருப்பதோடு, சத்து மிகுந்தும் இருக்கும்.
புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வையுங்கள். ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கியதும், கொத்தமல்லித் தழையை தூவி விடுங்கள். இது ரசத்திற்கு கூடுதல் சுவையை கொடுக்கும்.