மழைக்கால மாலை வேளைகளில் அல்லது இதமான சூழலில் சூடான, மொறுமொறுப்பான சிற்றுண்டிகள் சாப்பிட மனம் ஏங்கும். அப்போது, நம்ம ஊர் பஜ்ஜி, போண்டாக்களுக்கு இணையாக, மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமான ஒரு சுவையான சிற்றுண்டிதான் கண்டா பஜ்ஜி. 'கண்டா' என்றால் வெங்காயம் என்பதால், இது வெங்காய பஜ்ஜி என்றே அழைக்கப்படுகிறது. வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் சுவையான கண்டா பஜ்ஜியை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம்
கடலை மாவு
அரிசி மாவு
இஞ்சி பூண்டு விழுது
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயத்தூள்
சோம்பு
சமையல் சோடா
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து, அதில் மெல்லியதாக நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் மெல்லியதாக நறுக்கப்படுவது பஜ்ஜி மொறுமொறுப்பாக வர மிகவும் முக்கியம். இப்போது வெங்காயத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் நன்றாகப் பிசையவும். இவ்வாறு செய்வதால் வெங்காயத்திலிருந்து நீர் வெளியாகும், இது மாவை பிசைய உதவும்.
வெங்காயம் நீர் விட்டதும், அதில் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோம்பு, சமையல் சோடா ஆகிய அனைத்தையும் சேர்க்கவும். அனைத்தையும் ஒருமுறை நன்றாகக் கலந்து விடவும்.
இப்போது கடலை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசைய ஆரம்பிக்கவும். வெங்காயத்திலிருந்து வெளிவந்த நீரே மாவைப் பிசையப் போதுமானதாக இருக்கும். தேவைப்பட்டால், மிகக் குறைந்த அளவு தண்ணீரைத் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
மாவு மிகவும் நீர்த்துப் போகாமல், கெட்டியாக இருக்க வேண்டும். மாவு கலவை வெங்காயத்துடன் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும், அதே நேரத்தில் வெங்காயம் தனித்தனியாகத் தெரிய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் நன்றாக சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
இப்போது பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளை எடுத்து எண்ணெயில் போடவும். ஒரே நேரத்தில் அதிகமாகப் போட வேண்டாம். பஜ்ஜிகள் இரண்டு பக்கமும் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்து எடுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்ததும், டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச விடவும்.
இப்போது சூடான, மொறுமொறுப்பான, காரசாரமான கண்டா பஜ்ஜி தயார். மழைக்காலத்திற்கோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ இதனை டீயுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.