ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைப் பணிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆட்சியர் அலுவலக முற்றுகையைத் தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
ஊராட்சி செயலாளரின் சுயநலத்தால் கிராம மக்களுக்குப் பணி மறுக்கப்படுவதாகப் பெண்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.