சமையல் செய்யத் தொடங்குபவர்களுக்கு ஏற்ற, சுலபமான மற்றும் சுவையான தக்காளி தொக்கு ரெசிபி இதோ. வீட்டில் வேறு எதுவும் இல்லையென்றாலும், இந்தத் தொக்கு இருந்தால் போதும், இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக, திக்காகச் செய்து இட்லியுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள்
உப்பு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி (கடைசியாகத் தூவ)
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுந்து சேர்த்து பொரிய விடவும். கடுகு உளுந்து பொரிந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு, ஒரு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய மூன்று பெரிய தக்காளிகளை சேர்க்கவும். தக்காளிகளை நன்கு வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
கலவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு வதங்கியதும், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் ஒன்று சேர நன்றாக வதக்க வேண்டும். இப்போது, கடாயை மூடி போட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.
தக்காளி தொக்கு நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், ஒரு முறை நன்கு கலந்து விடவும்.
கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து பரிமாறவும்.