/indian-express-tamil/media/media_files/2025/10/27/kodukkapuli-2025-10-27-16-21-07.jpg)
கொடுக்காய்ப்புளி என்றதும், இனிப்பும் லேசான துவர்ப்பும் கலந்த சுவையும், பள்ளிப் பருவத்தின் பசுமையான நினைவுகளும் ஒருசிலருக்கு மனதில் வந்து போகலாம். இது வழக்கமான புளி போல இல்லாமல், தனித்துவமான சுவை கொண்டது. பழந்தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காய், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூலான குறுந்தொகையின் 274-வது பாடலில் கூட ஆசிரியர் உருத்திரனார் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இது, சீனி புளியங்காய், கோண புளியங்காய் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கொடுக்காய்ப்புளி ஒரு வெப்ப மண்டல மரமாகும். இது குறுகிய காலத்தில் விரைவாக வளரக்கூடியது. எந்த வகை மண்ணிலும் செழித்து வளரும் ஆற்றல் கொண்டது. ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் இருக்கும் காய், பழுத்ததும் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இதன் உட்புற சதைப்பகுதி வெண்மையாகவும், கருப்பு நிற விதைகளைக் கொண்டும் இருக்கும். கொடுக்காய்ப்புளியின் இலை, காய், பூ என அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயன் கொண்டவை. இதன் இலைகள் கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாகப் பயன்படுகின்றன.
கொடுக்காய்ப்புளியின் நன்மைகள்:
கொடுக்காய்ப்புளியில் உள்ள வைட்டமின் B1 சத்து மன அழுத்தத்தைக் குறைத்து, அதனால் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகிறது. இந்த B1 சத்து, மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் B2 சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது. 30 வயதைக் கடந்தவர்களுக்கு முகத்தில் ஏற்படும் மங்கு பிரச்சனையைத் தீர்ப்பதிலும், பொதுவான சரும பாதிப்புகளுக்கும் இது உதவுகிறது. வைட்டமின் C சத்து முகத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தைக் குறைத்து, சருமத்திற்கு ஒரு பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் முகப்பொலிவைப் பெறலாம்.
ஆப்பிளுக்கு இணையான பழமாகப் பார்க்கப்படும் கொடுக்காய்ப்புளியில், அதிக அளவு வைட்டமின் C உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜென்டாக செயல்பட்டு, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதனால், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் சிறப்பாகச் செயல்பட இந்தப் பழம் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுவைச் சேர்க்கிறது.
பல்வலி, ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது போன்ற பல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வைத் தருகிறது. வயிற்றில் ஏற்படும் அல்சர், வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றுக்கும் இந்தப் பழம் சிறந்த தீர்வாக உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து இந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்தப் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கல்லீரல் பாதிப்படையாமல் தடுக்கிறது. மேலும், கல்லீரல் சிறப்பாகச் செயல்படுவதற்கும் இது துணைபுரிகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us