சோளம் என்று சொன்னாலே பலருக்கு நினைவில் வருவது மக்காச் சோளமாக தான் இருக்கும். ஆனால், மக்காச் சோளம் என்பது புதிதாக வந்த வீரிய ஒட்டு ரக சோளம் தான் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இவை சுவையாக இருக்குமே தவிர, பெருமளவு பயனைத் தராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நம் பாரம்பரிய முறைப்படி சிறுசோளம் தான் நீண்ட நாட்களாக வழக்கத்தில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு காலத்தில் இந்த சிறுசோளத்தை தினசரி உணவாகவே மக்கள் எடுத்துக் கொண்டனர். தற்போதைய சூழலில் சிறுசோளத்தை கிராம பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனமாக தான் கொடுக்கிறார்கள்.
சிறுசோளத்தில் நம் உடலுக்கு தேவையான புரதச் சத்து நிறைந்திருக்கிறது. பல குழந்தைகளுக்கு சிறு வயதில் அதிகமாக சளி பிடிப்பது, இருமல் வருவது போன்றவைகளுக்கு புரதச் சத்து குறைபாடு தான் காரணம். அதனடிப்படையில் தேவையான அளவு புரதச் சத்து சிறுசோளத்தில் இருக்கிறது.
புரதச் சத்து நிறைய தானியங்களில் இருந்தாலும், சில வகைகளில் தான் அந்த புரதச் சத்து நம் உடலில் முழுமையாக சென்றடையக் கூடிய தன்மை இருக்கிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த வகையில், சிறுசோளத்தில் தான் புரதச் சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறுசோளத்தை மாவாக மாற்றி ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, சோள மாவுடன், உளுந்து மாவையும் சேர்த்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். சிறுசோள மாவு சேர்த்து சுடும் தோசை இயல்பாகவே மொறுமொறுப்பாக வரும் தன்மை உடையது. எனவே குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
இது தவிர சிறுசோளத்தில் பனியாரம் செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு விருப்பமாக இருக்கும். அதன்படி, ஆரோக்கியமான உணவுகளை, சுவையாக சமைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம்.