சுக்கு காபி என்பது ஒரு பாரம்பரிய பானம். சாதாரண டீ மற்றும் காபி போன்றவற்றுக்கு மாற்றாக இதனை அருந்தலாம். இவ்வாறு சுக்கு காபி அருந்துவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்று சுக்கு காபி தாத்தா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பித்த உடம்பு உள்ளவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். ஆனால், பித்த உடம்பு இருப்பவர்கள் சாதாரண டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இது தவிர, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவுவதாக கூறப்படுகிறது. அதன்படி சுவையான சுக்கு காபி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு,
மல்லி,
வால் மிளகு,
ஏலக்காய்,
தண்ணீர் மற்றும்
நாட்டு சர்க்கரை.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 25 கிராம் சுக்கு, 50 கிராம் மல்லி விதைகள், 15 கிராம் வால் மிளகு, 8 ஏலக்காய் ஆகியவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கலாம்.
இனி, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் கொதித்து வரும் போது தயாரித்து வைத்துள்ள சுக்கு காபி பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம். இதனை நன்றாக கலக்கி, அதன் பின்னர் வடிகட்டி விடலாம். இதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை கலந்தால் சுவையான மற்றும் சத்தான சுக்கு காபி ரெடியாகி விடும்.