பிரண்டை, சித்த மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான மூலிகை. "பிரண்டையை வயித்துல கட்டிக்கோ" என்ற பழமொழி, அதன் செரிமான மற்றும் வயிறு சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் தன்மையைப் பறைசாற்றுகிறது. ஆனால், பிரண்டை வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களுக்கும் ஒரு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
வாரம் ஒருமுறை பிரண்டையை உப்பாகவோ அல்லது துவையலாகவோ உட்கொள்வது, மாதவிடாய் தொடர்பான வலிகள், தசை அழற்சி, தசை இறுக்கம் சார்ந்த நோய்கள் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும் என டாக்டர் கௌதமன் கூறுகிறார்.
சத்து நிறைந்ததும், சுவையானதுமான பிரண்டை துவையலை வீட்டிலேயே எளிதாக எப்படி தயாரிக்கலாம் என்று வீரன்வீடு இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கட்டு
நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5-6 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - 1 துண்டு (சிறிதாக நறுக்கியது அல்லது துருவியது)
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரண்டையின் மேல் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிரண்டையைச் சுத்தம் செய்யும்போது கைகளில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டால், அரிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இளம் பிரண்டையாக இருந்தால் அரிப்பு குறைவாக இருக்கும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வறுத்ததும், அதனுடன் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது நறுக்கிய தேங்காய் மற்றும் சுத்தம் செய்த பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து, பிரண்டையின் பச்சை வாசனை நீங்கி, நிறம் மாறி, சுருங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். பிரண்டை நன்கு வதங்குவது தொண்டையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அல்லது மிகக் குறைந்த அளவு தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். (உரலில் அரைத்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்).
ஒரு சிறிய கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கலாம். இந்த சுவையான மற்றும் சத்தான பிரண்டை துவையலை சூடான சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இது உங்கள் உணவுக்குப் புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு கலந்த தனித்துவமான சுவையைக் கொடுக்கும்.