நமது பாரம்பரிய மருத்துவ அறிவின் பொக்கிஷங்களில் ஒன்றான நல்வேளை மூலிகை (Cleome gynandra), சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் எளிதாகக் காணப்படும் ஒரு அற்புதமான தாவரம். வேளைச்செடி, தைவேளை போன்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படும் இது, எண்ணற்ற நோய்களுக்கு இயற்கை தந்த அருமருந்தாகப் போற்றப்படுகிறது.
இதன் மருத்துவக் குணங்கள் நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு, இன்றும் பலரின் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைந்துள்ளன என்று நலமுடன் வாழ்வோம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தலைவலி மற்றும் சைனஸ் போன்ற தொந்தரவுகளுக்கு நல்வேளை ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவதன் மூலம் உடனடித் தலைவலி நீங்கும்.
மேலும், நீண்ட காலமாகத் தலையில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற, முழுத் தாவரத்தையும் அரைத்து தலையில் துணியால் கட்டி வருவது சிறப்பான பலனளிக்கும். சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுவோர், நல்வேளை சாற்றுடன் பால் மற்றும் நாட்டுச்சர்க்கரை கலந்து அருந்துவதன் மூலம் நல்லதொரு முன்னேற்றத்தைக் காணலாம்.
சளி, இருமல் மற்றும் கபக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கும் நல்வேளை நிவாரணம் வழங்குகிறது. இதன் பூக்களுடன் தூதுவேளைப் பூ சேர்த்து நெய்யில் வதக்கித் துவையலாகச் சாப்பிடுவதன் மூலம் நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் அகன்று, வாத தோஷமும் சமநிலை அடையும். காதுகளில் சீழ் வடிதல் போன்ற உபாதைகளுக்கும் நல்வேளை இலையின் சாற்றை சில துளிகள் காதில் விடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.