வயிறு உப்புசம், அடிக்கடி ஏப்பம்... கல்லீரல் பாதிப்பு அபாயம்: ஒரு ஏலக்காய், கொஞ்சம் சுக்கு, மிளகு மூலமாக தீர்வு
செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கியுள்ள மருத்துவர் உஷா நந்தினி, அதற்கு மருந்தாக செயல்படக் கூடிய கசாயம் எப்படி தயாரிப்பது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இளம் தலைமுறையினர் தொடங்கி வயதானவர்கள் வரை பலருக்கு செரிமானக் கோளாறு காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக சிலர் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் சூழலில் உள்ளனர்.
Advertisment
சிலருக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமானம் ஆவதில் பிரச்சனை இருக்கும். மேலும், அடிக்கடி ஏப்பம் மற்றும் வயிறு உப்புசம் தொல்லையும் நிறைய பேருக்கு இருக்கும். இவை அனைத்தும் செரிமான கோளாறு அல்லது ஃபேட்டி லிவர் பிரச்சனையின் காரணமாக ஏற்படலாம் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கக் கூடிய மருந்து ஒன்றை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என மருத்துவர் உஷா நந்தினி அறிவுறுத்துகிறார். அதன்படி, ஒரு ஏலக்காயை எடுத்து நன்றாக தட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, மிளகுப் பொடி மற்றும் திப்பிலிப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
குறிப்பாக, இவற்றை தேநீர் போன்று தயாரித்து உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால் செரிமான கொளாறு தொல்லை நீங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.