/indian-express-tamil/media/media_files/2025/06/17/VcgU7P8XiVDHADC21NcS.jpg)
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள நெல்லிக்காய் வைத்து ஒரு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் நெல்லிக்காய் பிரதானமாகப் பயன்படுத்தப்படுவதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. குளிர் மற்றும் இருமலுக்கான சிறந்த நிவாரணியாகக் கருதப்படும் இந்த ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வழக்கமான தக்காளி அல்லது புளி ரசத்தை விட, ஒரு புதிய மற்றும் புத்துணர்ச்சி தரும் மாற்றை நீங்கள் தேடினால், இந்த நெல்லிக்காய் ரசம் உங்களுக்கு ஏற்றது. இது சமைப்பதற்கும் எளிதானது மற்றும் அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 4
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சீரகம் -1
மிளகு - 1
பூண்டு 5-6
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய்
கடுகு
உப்பு
தண்ணீர்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் துண்டுகள், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைச் சேர்த்து, மீதமுள்ள தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து, நடுத்தர தீயில் கொதிக்க விடவும். நுரை பொங்கி வர ஆரம்பித்து, ஓரங்களில் கொதிக்கும் நிலை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். ரசம் நீண்ட நேரம் கொதிக்கக்கூடாது. ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் கடுகு சேர்த்து வெடித்தவுடன், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இந்த தாளிப்பை ரசத்துடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, சூடான சாதத்துடன் நெல்லிக்காய் ரசத்தைப் பரிமாறவும். இது சாதத்துடன் மட்டுமின்றி, அப்படியே சூப் போலவும் குடிக்க சுவையாக இருக்கும். வெறும் நெல்லிக்காய் ஜூஸ் பிடிக்கவில்லை என்பவர்கள் ரசம் மாதிரி ட்ரை பண்ணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.