பயறுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும், முளை கட்டிய பயறுகளை சாப்பிட்டால் பலன் இரு மடங்கு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கு பலருக்கும் பயிர்களை எப்படி முளை கட்டுவது என தெரியவில்லை. அதனால், இப்போது பயறுகளை எளிமையான வழியில் எப்படி முளை கட்டுவது என்பதை பற்றி பார்ப்போம்.
எந்த பயறுகளை முளை கட்டுவதாக இருந்தாலும், ஒரு நாள் முன்னதாகவே அதை ஊற வைக்க வேண்டும். இன்று நீங்கள் பயறுகளை முளை கட்டுவதாக இருந்தால், நேற்று இரவே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி பயிரை ஊற வைக்க வேண்டும்.இதோ பயிரை முளைக்கட்டுவதற்கு சில வழிமுறைகள்:
கொள்ளு பயிரை ஊற வைத்திருந்தால், அதனை நன்றாக வடிக்கட்டிய பின்னர் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு முழுமையாக மூடாமல், காற்று புகும் அளவிற்கு இடவெளி விட்டு மூடி வைத்தால் காலையில் முளை கட்டிய பயிர் ரெடியாகிவிடும்.
ஒரு மண்சட்டியில், சுண்டலை ஊறவைத்து எடுத்து பின்னர் ஒரு பாத்திரத்திலோ துணியிலோ பரப்பி அதன்மீது வடித்தட்டை வைத்து முடி விடவும்.
காரமணி அல்லது தட்டப்பயிரை ஊறவைத்திருந்தால், அந்த தண்ணீரை நன்றாக வடித்து ஒரு ஹாட் பாக்சில் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து அதில் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள காரமணியை சேர்க்க வேண்டும். 1 நிமிடத்திற்கு பின்னர், ஹாட்பாக்சில் இருந்த வெதுவெதுப்பான நீரை கீழே ஊற்றிவிட்டு ஹாட் பாக்ஸை மூடி வைத்து அடுத்த நாள் காலை திறந்து பார்த்தால், பயிர் நன்றாக முளை விட்டிருக்கும்.
ஒரு பாத்திரம் மீது வடிக்கட்டியை வைத்து அதில், ஊற வைத்திருந்த பச்சை பயிரை சேர்த்து வெள்ளை துணியால் மூடி, அவ்வப்போது துணி மீது தண்ணீர் தெளித்து வந்தால் பயிர் வேகமாக முளை விடும்.
வேர்கடலையை ஊற வைத்து எடுத்து வைத்திருந்தால், ஒரு ஈரமான வெள்ளை துணியில் இந்த கடலையை சேர்த்து கட்டி ஒர் தட்டு அல்லது பாத்திரத்தில் வைத்து மறுநாள் காலை திறந்து பார்த்தால் பயிர் முளை கட்டி இருக்கும்.
ஒரு டிபன் பாக்ஸில் ஊற வைத்த பயிரை சேர்த்து மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். காலை முளைத்து வந்துவிடும். இட்லி தட்டு, காய்கறி வடிகட்டி போன்றவற்றையும் பயிர் முளை கட்டுவதற்கு பயன்படுத்தலாம்.
வீட்டில் அதிகமானோர் இருந்தால் ஒரு சல்லடையில் பயிரை சேர்த்து மேல் ஒரு வெள்ளை துணியால் மூடி வைத்து விட்டால் பயிர் நன்றாக முளைவிட்டு வரும். ஒரே சல்லடையில் அனைத்து பயிர்களையும் அல்லது தனியாகவும் செய்யலாம்.
எந்த பயிர்களை வேண்டுமானாலும், இம்முறைகளை பயன்படுத்தி முளை கட்டலாம். பச்சை பயிறு, கொள்ளு ஆகியவை முளை விடுவதற்கு நீண்ட நேரம் எடுக்காது. அதுவே, சுண்டல் வேர்க்கடலை போன்ற பயிர்கள் முளை கட்டுவதற்கு 24 மணி நேரத்தில் மேல் எடுக்கும்.
முளை கட்டிய பயிர்களை 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. முளை கட்டுவதற்காக வைத்துள்ள பயிர்களை சூரிய வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“