உணவு நாம் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய பொருளாகும். ஊட்டச்சத்தான உணவு சாப்பிடுவது அவசியம். அவ்வாறு சாப்பிடும்போது நோய் இன்றி உயிர் வாழ முடியும். இரும்பு சத்து, கால்சியம், அயோடின் போன்ற கனிம சத்துகள் ஏ,பி, சி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முறையான உணவு பழக்கம் அவசியம்.
இன்றைய நவீன காலத்தில் அன்றாட உணவு பழக்கங்களும் மாறிவிட்டன. துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை வைத்துள்ளோம். பீட்சா, பர்கர் ஓகே, ஆனால் காய்கறி வேண்டாம் என்று காலம் மாறி வருகிறது. வீட்டில் சமைப்பது கூட குறைந்து வருகிறது. வேலைக்கு செல்ல வேண்டும், நேரம் ஆகிவிட்டது என பல நேரங்களில் உணவு சாப்பிடாமல் சென்றுவிடுவோம். சில நேரங்களில் சீக்கிரமா சமையல் முடிக்கணும் என்ற எண்ணமும் தோன்றும். இதற்கு எளிதாக 10 நிமிடத்தில் தக்காளி குழம்பு சமைத்து சாப்பிடலாம். இதற்கு ஏற்றாற் போல் தக்காளி விலையும் தற்போது குறைவாக உள்ளது.
10 நிமிடத்தில் தக்காளி குழம்பு
முதலில் 8-10 தக்காளியை எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து 4 முதல் 5 வெங்காயம் எடுத்து சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய்யில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்ததாக, வெங்காயத்துடன் அரைத்து எடுத்து வைத்த தக்காளியை சேர்க்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின், கடலை மாவை கடாயில் உள்ள தக்காளி, வெங்காயத்துடன் சேர்க்கவும்.
அடுத்து தேவையான அளவு உப்பு, மஞ்சள், கரம் மசாலா சேர்க்கவும். உங்கள் தேவைக்கு ஏற்ப, குழம்பு தன்மைக்கு ஏற்ப 2-3 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும். சாப்பாடு, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.