இட்லிக்கு விரைவில் சாம்பார் செய்துவிட வேண்டும் என்று நாம் நினைப்போம் ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் சாம்பார் செய்வது கடினமாக இருக்கும். இந்நிலையில் இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
செய்முறை :
1/2 கப் அளவு துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த துவரம் பருப்பு – 1/2 கப், நறுக்கிய மஞ்சள் பூசணிக்காய் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பருப்பும் காயும் நன்றாக வெந்து வந்தவுடன் லேசாக மசித்து கொள்ளுங்கள். குக்கரில் வெந்த பருப்பு காய் அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக சிறிய தாளிப்பு கரண்டியில் வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மணக்க மணக்க வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு இந்த மூன்று பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த பொடியை அப்படியே குக்கரில் இருக்கும் சாம்பாரில் போட்டு விடுங்கள். சாம்பாரை அடுப்பில் வையுங்கள் லேசாக கொதிக்கட்டும். கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 1, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு தாளித்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் போல கொதிக்க விட்டால் சாம்பார் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“