வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சுவையான பலாப்பழம் ஜாம் செய்வது எப்படி என்று பார்ப்போம். பலாச்சுளைகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மட்டும் கொண்டு, எந்தவிதமான செயற்கை பதப்படுத்திகள் இல்லாமலும் இந்த ஜாமை தயாரிக்கலாம். இது காலை உணவுக்கும், ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
பலாச்சுளைகள் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பழுத்த பலாச்சுளைகளை எடுத்து, கத்தியின் உதவியுடன் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பலாச்சுளைகளை ஒரு கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பலாச்சுளைகள் நன்றாக மசித்து விடும் பதத்திற்கு வேக வேண்டும். அவ்வப்போது கிளறி விடவும், அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
பலாச்சுளைகள் வெந்தவுடன், கரண்டியாலோ அல்லது மத்துனாலோ நன்றாக மசித்துக் கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் மசிய வேண்டும். விரும்பினால் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கலாம், ஆனால் முற்றிலும் கூழாக அரைக்க வேண்டாம்.
பின்னர் மசித்த பலாப்பழ விழுதை மீண்டும் அதே பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மிதமான தீயில் வைத்து கிளறவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து, பலாப்பழ விழுதோடு ஒன்றிணைந்து விடும்.
ஜாம் கெட்டியாக ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். தீயை மிதமாக வைத்து ஜாம் சரியான பதத்திற்கு வந்தவுடன், எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாகக் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்
ஜாம் சரியான பதத்திற்கு வந்ததா என்று பார்க்க, ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு ஜாமை எடுத்து ஆற விடவும். ஆறியதும் கெட்டியாக இருந்தால், அது சரியான பதம். ஜாம் முற்றிலும் ஆறிய பிறகு, சுத்தமான மற்றும் காய்ந்த கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி காற்றுப்புகாதவாறு மூடி வைக்கவும். இந்த ஜாமை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.