குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இடம்பெற்ற கருவாடு சாதம் பலரையும் கவர்ந்த நிலையில், தற்போது நெத்திலி கருவாடு சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக, சில சமயங்களில் கருவாடு சாதத்துடன் பருப்பு பொடி போன்றவற்றைச் சேர்க்கும்போது நெத்திலியின் தனித்துவமான சுவை குறைந்துவிடும்.
அதைத் தவிர்க்க, வெறும் நெத்திலியை மட்டும் வைத்து இந்தச் சுவையான சாதத்தை எப்படித் தயாரிக்கலாம் என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு
சமையல் எண்ணெய்
பிரியாணி இலை
மசாலாப் பொருட்கள் (மிளகு, சோம்பு)
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்
பூண்டு
முந்திரிப்பருப்பு
இஞ்சி பூண்டு விழுது
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
தக்காளி
மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள்
கொத்தமல்லி இலை
சாதம்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை மற்றும் சிறிது மசாலாப் பொருட்களான மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் நிறைய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், முந்திரிப்பருப்பு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் இரண்டு பெரிய தக்காளிகளைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு, சுத்தம் செய்த நெத்திலி கருவாட்டைச் சேர்த்து, சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் கவனமாகச் சேர்க்கவும்.
இந்தக் கலவை தொக்கு பதம் வருவதற்கு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்தவுடன், கொத்தமல்லி இலை தூவி இறக்கலாம். சூடான சாதத்துடன் இந்த நெத்திலி கருவாடு தொக்கை கலந்து சாப்பிட, இதன் சுவை அபாரமாக இருக்கும்.