சமையலை சிறப்பாக மாற்றவும் ஒரு சில சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ஊறுகாய் செய்வது முதல் உடையாமல் கொழுக்கட்டை செய்வது என சில சமையல் குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
பலகாரங்கள்: சீடை, தேன்குழல் போன்ற பலகாரங்கள் செய்ய மாவு பிசையும்போது, வெந்நீர் சேர்த்துப் பிசைந்தால், அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
போளி: கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து போளி செய்தால், அதன் சுவை தனித்துவமாக இருக்கும்.
சத்துக்கள் வீணாகாமல் இருக்க: கீரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருக்க, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேகவைக்க வேண்டும்.
ருசியான உருளைக்கிழங்கு காரக்கறி: உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் சேர்த்து வதக்கினால், கறி மிகவும் ருசியாக இருக்கும்.
பால்: பாலுடன் சிறிது ஏலக்காய் கலந்து காய்ச்சினால், பால் நல்ல மணமாகவும், நீண்ட நேரம் புளிப்பு ஏறாமலும் இருக்கும்.
காய்கறிகள் கெடாமல் இருக்க: ஈரமான காய்கறிகளை ஒரு காகிதத்தில் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.
மொறுமொறு உளுந்து வடை: உளுந்து வடை தட்டும்போது, கைகளில் சிறிது அரிசி மாவை லேசாகத் தொட்டுத் தட்டினால், மொறுமொறுப்பான வடை கிடைக்கும்.
விரிசல் இல்லாத கொழுக்கட்டை: கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும்.
ரசப்பொடியின் நறுமணம்: கொத்தமல்லித்தழையை ரசத்தில் பயன்படுத்திய பின், அதன் தண்டுகளை வீணாக்காமல் காயவைத்து, ரசப்பொடியுடன் சேர்த்து அரைத்தால், ரசம் நல்ல வாசனையாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய்: வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் தயார் செய்த பிறகு, எலுமிச்சை தோல்களை வீணாக்காமல், அவற்றைப் பயன்படுத்தி சுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்யலாம்.
பூசணம் வராத சாம்பார் பொடி: சாம்பார் பொடி அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்தால், சாம்பார் பொடியில் பூசணம் வராது.