கொங்கு ஸ்பெஷல் புளிவடை என்பது மேற்கு தமிழகத்தின் கொங்கு மண்டலத்திற்கே உரிய ஒரு தனித்துவமான மற்றும் சுவையான பலகாரம். இது வழக்கமான பருப்பு வடை அல்லது உளுந்து வடை போல இல்லாமல், புளிப்புச் சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான சுவையைக் கொண்டது. மழைக்கால மாலைப்பொழுதில் சூடான காபியுடன் சாப்பிட இது மிகவும் பொருத்தமானது.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை
சின்ன வெங்காயம் - 5
கொத்தமல்லி
புளி
சீரகம் - ஒரு ஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். அதனுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, நீரை வடித்துவிட்டு, ஊறவைத்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து, சற்று கரகரப்பான பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் அரைப்பது முக்கியம்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாழை இலையின் ஒரு பகுதி அல்லது பிளாஸ்டிக் கவரின் ஒரு புறத்தில் லேசாக எண்ணெய் தடவவும். அரைத்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு உருண்டைகளை எடுத்து, வடை தட்டுவது போல சற்று கனமாக தட்டவும். (சாதாரண தட்டுவடைகளை விட இவை சற்று கனமாக இருக்க வேண்டும்).
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, வடை பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாக கவனமாக எண்ணெயில் விடவும். வடை வெந்து மேலே எழும்பி வரும்போது, மறுபக்கம் திருப்பிப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சுவையான கொங்கு நாட்டு புளிவடை தயார். ழக்கமான பருப்பு வடை அல்லது உளுந்து வடைக்கு ஒரு மாற்றாக, இந்த வித்தியாசமான புளிவடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள்.