காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது அவசியம். அவசரமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் காலை உணவை தவிர்த்துவிடுவர். ஆனால் அதை செய்யக் கூடாது. கட்டாயமாக காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில் ஈஸியாக செய்யும் வகையில் மற்றும் ஆரோக்கியமான சிவப்பு அவல் உப்புமா செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1/2 கப்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
வேர்க்கடலை - 1 சிறிய கப்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் பால் - 1 கப்
சீரகம் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கப் தேங்காய் பாலை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அவலை கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். சுத்தம் செய்த அவலை தேங்காய் பாலில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின் வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொறிக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்குங்கள். பின், ஊற வைத்த அவலை இதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும். இறுதியாக அரைத்த வேர்க்கடலையை தூவி பிரட்டவும். கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.
அவ்வளவுதான் சிவப்பு அவல் உப்புமா தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“