/indian-express-tamil/media/media_files/2025/06/04/PIFDGMHxFZ9FliuInJHb.jpg)
ஒவ்வொரு ஊருக்கும் குறிப்பிட்ட சில வகையான உணவு பொருட்கள் ஃபேமஸாக இருக்கும். அந்த வகையில் மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி செய்முறை குறித்து இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
பச்சை மிளகாய்,
வரமிளகாய்,
சின்ன வெங்காயம்,
இஞ்சி,
பூண்டு,
பொட்டுக் கடலை,
தண்ணீர்,
உப்பு,
கடுகு,
சீரகம் மற்றும்
கறிவேப்பிலை.
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் சூடானதும் நான்கு பச்சை மிளகாய்களை வெட்டி இத்துடன் சேர்க்க வேண்டும். மேலும், நான்கு வரமிளகாய்களையும் இத்துடன் சேர்த்து வறுக்க வேண்டும்.
இதையடுத்து, ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயத்தை இதில் சேர்த்து வதக்க வேண்டும். மேலும், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இதன் பச்சை வாசனை நீங்கியதும், இவற்றை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும்.
இப்போது, ஒரு கப் பொட்டுக் கடலை, வதக்கி வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இவ்வாறு ஒரு முறை அரைத்ததும், மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்தக் கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து தனியாக வைத்து விடலாம். இதன் பின்னர், அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, சீரகம், இரண்டு வரமிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்தால் சுவையான மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி தயாராகி விடும். வீட்டில் தேங்காய் இல்லையென்றால் இந்த சட்னியை சிம்பிளாக செய்து விடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.