தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், தயிர், மோர் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் மாம்பழ சீசன் தொடங்கி உள்ள நிலையில் வெயிலுக்கு இதமா மாம்பழ குல்ஃபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 500 மிலி
சர்க்கரை – 3/4 கப்
சோள மாவு – 2 டீஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
மாம்பழ கூழ் – ஒன்றரை கப்
மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
அடுத்தாக அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும். பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கடைசியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறிய அளவு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி ப்ரிஜ் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு உறைய வேண்டும். குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சாப்பிடலாம். அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ குல்பி வீட்டிலேயே தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil