நமது வீட்டில் வைக்கும் வத்தல் குழம்பை விட கல்யாண வீட்டு வத்தக் குழம்பு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வத்தல் – 1/4 கப், நல்லெண்ணெய் – தேவையான அளவு, வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு.
வெள்ளைப் பூண்டு – 50 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 2, உப்பு – 1ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித்தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், புளி – சிறிய அளவு, வெல்லம் – சிறிதளவு.
செய்முறை:
சுண்டக்காய் வத்தலை சூடான தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். சூடானதும் வெந்தயம், சீரகம், கடுகு சேர்த்துக் கொள்ளவும். கடுகு, சீரகம் பொரிந்த பின்னர் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் 50 கிராம் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொள்ளவும்.பூண்டு ஓரளவு வதங்கிய பின்னர் 100 கிராம் சின்னவெங்காயம் சேர்த்து மென்மையாக வதக்கிக் கொள்ளவும் .வெங்காயம் வதங்கியதும் தக்காளி மிக்ஸியில் நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய்த்தூள் மற்றும் ½ தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பின்னர் சுண்டைக் காய்களை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் மூடி வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும் அவ்வப்போது கிளறி விடவும். குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானதும் சிறிதளவு வெல்லம் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வைக்கவும். சுவையான வத்தக் குழம்பு தயாராகிவிடும்.