/indian-express-tamil/media/media_files/2025/04/27/lC1TM7dno5EeLOCO1DEc.jpg)
சிலருக்கு அடிக்கடி வாயில் புண் ஏற்படும். இதனை பெரிய பிரச்சனையாக கருத வேண்டியது இல்லை என்றாலும், அன்றாடம் சாப்பிடும் போது, நீர் அருந்தும் போது வலியை ஏற்படுத்தும். அந்த வகையில் வாய்ப்புண் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
வைட்டமின் பி சத்து குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதேபோல், உடல் சூடு காரணமாகவும் வாய்ப் புண் வருவதாக சித்த மருத்துவத்தில் கூறுகின்றனர். செரிமானம் சரியாக இல்லாமல் குடல் பகுதியில் புண் ஏற்படும் போதும், வாயில் புண் வரக் கூடும்.
அந்த வகையில் முதலாவதாக வைட்டமின் பி சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் இருந்து வைட்டமின் பி சத்து கிடைக்கும்.
இது தவிர சில கீரை வகைகளும் வாய்ப்புண்ணை குணமாக்கும் ஆற்றல் கொண்டவை என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மணத்தக்காளி கீரை இதற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
அதன்படி, மணத்தக்காளி கீரை, தேங்காய்ப் பால் மற்றும் பாசிப் பயிறு ஆகிய மூன்றையும் சேர்த்து குழம்பாக வைத்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உடல் சூடு அதிகரித்திருக்கும் போது, மணத்தக்காளி கீரையை சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இது தவிர நம் அன்றாட உணவில் மோர் உள்ளிட்ட குளிர்ச்சி தரக் கூடிய உணவுகளை சாப்பிடுவதும் வாய்ப் புண் வருவதை வெகுவாக குறைக்கும் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.