ஒரு முறை இட்லி இப்படி செய்து பாருங்க. எல்லா இட்லிகளும் தீர்ந்துவிடும். சூப்பரான ரெசிபி.
ரவை – 1 கப்
உருளைக்கிழக்கு – 2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1 கப்
செய்முறை
மாவு தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை எடுத்து கொள்ளுங்கள். எந்த கப்பில் ரவை எடுக்கிறீர்களோ அதே கப்பில் தயிர், தண்ணீர் எடுத்து ஒன்றாக சேர்த்து கலக்கவும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலக்கி 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து கொஞ்சம் ஈனோ சேர்த்து வைக்கவும். இட்லிக்கான மாவு தயார்.
இப்போது, மசால் தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். அடுத்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கடைசியாக சிறிது லெமன் சாறு சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான், மசாலை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் உருளைக்கிழங்கோடு கேரட் , பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி ஊற்றலாம்
அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். இட்லி தட்டில் டம்ளர் அல்லது கரண்டி கொண்டு கொஞ்சமாக மாவு ஊற்றலாம். டம்ளரில் முதலில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். இப்போது கொஞ்சம் மாவு ஊற்றுங்கள் அடுத்து அதன் மேல் உருட்டி வைத்திருக்கும் மசாலாவை வைத்து மேலும் ஒரு கரண்டி மாவை ஊற்றுங்கள். இதே முறையில் இட்லி தட்டில் கூட ஊற்றலாம்.
அவ்வளவு தான் இப்போது இட்லி பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள். எப்பவும் போல் இட்லியை வேக வைத்து எடுங்கள். சுடச் சுடச் மசால் இட்லியை பரிமாறுங்கள். காய்கறிகள் இருப்பதால் சட்னி எதுவும் தேவையில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil