2025 புத்தாண்டு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு இனிப்பாக ஆரம்பிக்க இனிப்பு ஒப்புட்டு (போளி) செய்து இந்த நாளை ஆரம்பியுங்கள். சுவையான பருப்பு ஒப்புட்டு வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு
ஏலக்காய்த்தூள்
வெல்லம்
மைதா மாவு
சர்க்கரை
நல்லெண்ணெய்
செய்முறை
மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைய விடாமல் வேகவைத்து எடுக்கவேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
அதில் வாசனைக்காக ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும். அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடி ரொட்டி போல் தட்டவும்.
நல்லெண்ணைய் தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் வரும். தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். சுட்டு எடுத்தவுடன் ஒன்றின் மேல் ஒன்று வைக்க கூடாது. ஆற வைத்து அப்புறம் எடுத்து வைக்க வேண்டும். இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்து சேர்த்தும் செய்யலாம்.
சுமார் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பழத்துடன் சிறிது நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“