உருளைக்கிழங்கில் பல ரெசிபிக்கள் செய்யலாம். சாப்பாட்டிற்கு சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு சாம்பார் செய்யலாம். காய்கறியாக உருளைக்கிழங்கு பொடி மசால் செய்யலாம், பூரிக்கு தொட்டு சாப்பிட பூரி மசால் செய்யலாம். ஸ்நாக்ஸ் ரெசிபியாக சிப்ஸ் போன்றவைகள் செய்து சாப்பிடலாம். அந்தவகையில் இங்கு இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
உப்பு -தேவையான அளவு
பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - சிறிதளவு
அரைக்க தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்,
மிளகாய்தூள் - இரண்டரை டீஸ்பூன்
தனியாதூள் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். அடுத்தாக, அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதில், பொட்டுக்கடலை, தேங்காயை மட்டும் தனியாக அரைக்கவும். அடுத்தாக, கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
பிறகு, 2 கப் தண்ணீர் சேர்த்து உருளைக் கிழங்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள். கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். நன்கு கொதித்த பின் இறக்கவும். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி. இட்லி, தோசைக்கு சைட் டிஷ்யாக வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/