தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இணைந்து நடத்தும் சென்னை உணவுத் திருவிழா, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த உணவு திருவிழா வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதியம் 12:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை இதில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த உணவு திருவிழாவில் 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்த 35 உணவு அரங்குகளை அமைத்துள்ளனர். மேலும், 7 தயார் நிலை உணவு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இங்கு சுமார் 100 வகையான உணவுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், சுய உதவிக் குழுக்களின் 45 வகையான தயாரிப்பு பொருள்கள், 3 அரங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது.
பல வகையான உணவுகள்:
கோவை கொங்கு மட்டன் பிரியாணி,
கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில்,
கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி,
நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன்,
தர்மபுரி ரவா கஜூர்,
நீலகிரி ராகி களி - அவரை குழம்பு,
திருப்பூர் முட்டை ஊத்தாப்பம்,
காஞ்சிபுரம் கோயில் இட்லி,
சிவகங்கை மட்டன் உப்புக்கறி,
புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,
ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி,
வேலூர் ராகி கொழுக்கட்டை,
மதுரை கறி தோசை,
விருதுநகர் கரண்டி ஆம்லெட்,
தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு,
திருச்சி நவதானிய புட்டு,
மயிலாடுதுறை இறால் வடை,
நாகப்பட்டிணம் மசாலா பணியாரம்,
கன்னியாகுமரி பழம் பொறி,
சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இவை தவிர அரியலூர் வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய் லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட் மால்ட் பொடி, கடலூர் சங்குப்பூ சர்பத், தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய், சேலம் ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர் பாசிப்பருப்பு உருண்டை, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, மதுரை தொத்தல், நாகப்பட்டிணம் சுண்டைக்காய் வத்தல், ராமநாதபுரம் லோத்தல், தென்காசி தேன் நெல்லி, திருநெல்வேலி அல்வா போன்ற உணவு வகைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“